மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும்: மகேந்திரா குழும பார்த்தசாரதி கருத்து
சென்னை: வாகன துறையில் மின்சார வாகனங்களே இனி ஆதிக்கம் செலுத்தும் என்றும், எனவே அவற்றை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்றும் மகேந்திரா குழும நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-10ஆம் தேதிகளில் உலக முதலீட்டார்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று சென்னையில் துவங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் துவங்கிய மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அமேரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய மகேந்திரா குழுமங்களின் தலைமை நிதி அதிகாரி பார்த்தசாரதி வாகன துறையில் மின்சார வாகனங்களே இனி ஆதிக்கம் செலுத்தும் எனவே அவற்றை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.