தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது: சுனில் அரோரா திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது: சுனில் அரோரா திட்டவட்டம்

டெல்லி: மின்னணு வாக்கு எந்திரங்களில் இருந்து வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்கு எந்திர முறை குறித்து பல எதிர்க்கட்சிகள் குறைகூறி வருவதோடு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துவரும் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என ஏற்கெனவே பலமுறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறையும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார். இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்புகளின் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் திறந்தமனதோடு பரிசீலிக்க தேர்தல் ஆணையம் தயார் என்றும் அவர் கூறினார். அதேசமயம், அச்சுறுத்தல், வசைபாடுதல், நிர்ப்பந்தங்களுக்கு அஞ்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையைக் கைவிடப்போவதில்லை என்றும் சுனில் அரோரா தெரிவித்தார். வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என தெளிவுபடுத்த விரும்புவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

மூலக்கதை