2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மெக்லீன் பார்க் ஸ்டேடியம்: ராஸ் டெய்லர் உற்சாகம்

தினகரன்  தினகரன்
2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மெக்லீன் பார்க் ஸ்டேடியம்: ராஸ் டெய்லர் உற்சாகம்

நேப்பியர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்காக நேப்பியர் மெக்லீன் பார்க் ஸ்டேடியம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடிய இந்திய அணி, அங்கிருந்து நேராக நியூசிலாந்து சென்றுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது. முதல் ஒருநாள் போட்டி (பகல்/இரவு), நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக நேப்பியர் ஸ்டேடியம் புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளது. இங்கு 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 2ல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளிடையேயான ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற இருந்தது. மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்று நான்கு மணி நேரத்துக்கு மேலாகியும் மைதானம் ஈரமாகவே இருந்ததால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.இதைத் தொடர்ந்து மெக்லீன் பார்க் ஸ்டேடியத்தின் மழைநீர் வடிகால் வசதி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்து தென் ஆப்ரிக்காவுடன் நடக்க இருந்த ஒரு போட்டியும் இதே காரணத்துக்காக ஹாமில்டனுக்கு மாற்றப்பட்டது. இதனால் நேப்பியர் மைதானத்துக்கான அங்கீகாரத்தை ஐசிசி அதிரடியாக ரத்து செய்தது. நியூசிலாந்தின் மத்திய மாவட்டங்கள் நிர்வாகக் கவுன்சில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், நேப்பியர் ஸ்டேடியத்தை புதுப்பிக்கவும் முடிவு செய்தனர். ஆடுகளம், மைதானம் மற்றும் பார்வையாளர் மாடங்கள், வடிகால் வசதி என அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் புணரமைக்கப்பட்ட நிலையில், புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மெக்லீன் பார்க், 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச போட்டிக்கு தயாராகியுள்ளது. இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக விளையாடும் உள்ளூர் வீரரான ராஸ் டெய்லர் இது குறித்து கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊரில் விளையாட உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். ஆனால், இந்திய அணி இங்கு வந்து விளையாடும்போது நிலைமை வேறு. நியூசிலாந்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் அணியை ஆதரிக்கும்போது, ஸ்டேடியம் நிரம்பி வழியும். சில சமயங்களில் நியூசிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தில் விளையாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆடுகளத்தின் தன்மை குறித்து இப்போது எதுவும் கணிக்க முடியாது. 300 ரன் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதில்லை. அதற்கு குறைவான ஸ்கோர் அடித்தால் கூட போதுமானது. ஆடுகளம் சற்று கடினமானதாக இருந்தாலும் பொறுமையாக விளையாடினால் ரன் குவிக்க முடியும். இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார். தற்போது நல்ல பார்மில் உள்ள டெய்லர், இலங்கை அணியுடன் சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 54, 90, 137 ரன் விளாசி அசத்தியுள்ளார். 2015 உலக கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து வரும் வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதல் இடத்திலும், ராஸ் டெய்லர் 2வது இடத்திலும் உள்ளனர்.இதுவரை 210 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள டெய்லர் 7714 ரன் (அதிகம் 181*, சராசரி 47.91, சதம் 20, அரை சதம் 45) விளாசி உள்ளார்.

மூலக்கதை