அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பொய் கூறும் பாஜக: மம்தா புகார்

தினகரன்  தினகரன்
அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பொய் கூறும் பாஜக: மம்தா புகார்

கொல்கத்தா: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுக்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மல்டாவில் இன்று நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று மேற்கு வங்கம் வருகிறார். இதற்காக  மல்டாவில் உள்ள விமான ஓடுபாதையில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், விமான நிலையத்தில் கட்டுமானப்பணி நடைபெறுவதாக கூறி அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். பாஜக செல்வாக்கு அதிகரித்து வருவதை கண்டு அச்சம் அடைந்த மம்தா பானர்ஜி, அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார் என்று பாஜகவினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான அனுமதியை போலீசார் கொடுத்துவிட்டனர். பாஜகவினர் பொய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்” என்றார். 

மூலக்கதை