மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பெண் புலியை ஆண் புலி அடித்து சாப்பிட்ட விசித்திரம்

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பெண் புலியை ஆண் புலி அடித்து சாப்பிட்ட விசித்திரம்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பெண் புலியை ஆண் புலி அடித்து சாப்பிட்ட விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. மிருகங்கள் தனது இனத்தை அடித்து கொன்று சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் புலிகள் இனத்தில் அத்தகைய நடைமுறை இல்லை. ஆனால் அபூர்வமாக புலி தனது இனத்தை சேர்ந்த மற்றொரு புலியை அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் முந்திதாதர் என்ற இடத்தில் காங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி யானைகள் உள்ளிட்ட பல வகையான மிருகங்கள் உள்ளன. இந்த நிலையில் அங்கு இன உற்பத்திக்காக ஒரு பெண் புலியை ஆண் புலியுடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் புலியை அந்த ஆண் புலி அடித்துக் கொன்றது. மேலும் அதன் இறைச்சியை சாப்பிட்டது. பூங்கா ஊழியர்கள் பார்த்தபோது பெண் புலியின் மண்டை ஓடும், அதன் கால்களின் பாதங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.இந்த தகவலை தேசிய பூங்காவின் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஒரு புலி மற்றொரு புலியை அடித்துக்கொன்று சாப்பிடுவது அபூர்வ சம்பவமாகும். இத்தகைய சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. சில சமயங்களில் தனது குட்டியை புலிகள் தின்ற சம்பவம் நடந்தது உண்டு. ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு புலி அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்தது இல்லை என்றும் அவர் கூறினார். கொல்லப்பட்ட பெண் புலியின் எஞ்சிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே கொடூரமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும்போது பசியின் காரணமாக மற்றொன்றை அடித்துக் கொன்று சாப்பிடும் சம்பவம் நடந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்தியபிரதேசத்தில் அதிக புலிகள் வாழ்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு இது புலிகள் மாநிலம் என அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் 20 சதவீதம் புலிகள் இங்கு உள்ளன. உலக அளவில் 10 சதவீதம் புலிகள் இருக்கின்றன.

மூலக்கதை