‘பால் கூட கிடைக்கவில்லை’ சிறையில் பல இன்னல்களை அனுபவிக்கிறார் சசிகலா: புகழேந்தி பேட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டி: நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு ஏ-கிளாஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக வீண் பழி சுமத்துகின்றனர். சசிகலா பெயரை வைத்து அம்மாநில டிஐஜி ரூபா அரசியல் செய்து வருகிறார்.
சிறையில் பால் கூட கிடைக்காமல் பல இன்னல்களை சசிகலா அனுபவித்து வருகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை.
மோடி ஆட்சிதான் நடந்து வருகிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழகத்தை, மோடி ஆட்சி செய்து வருகிறார்.
மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை புதிதாக கட்டிய மருத்துவ கல்லூரிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால்தான் மத்திய அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால், 3 மணி நேரம் கூட அவர் ஆட்சியில் இருக்க முடியாது.
கொலை வழக்கில் அவர் உள்ளே சென்று விடுவார். கொடநாடு விவகாரத்தில் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு உள்ளது.
திராவிட ஆட்சிகளில் கொலைகுற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முதல்வராக இருந்தது கிடையாது. ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பது வேதனைக்குரியது.
கொடநாடு விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜவுடன்தான் கூட்டணி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.