நாவல் கதையில் நடிக்க விஜய் சம்மதிப்பாரா ?

தினமலர்  தினமலர்
நாவல் கதையில் நடிக்க விஜய் சம்மதிப்பாரா ?

'சர்கார்' பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதனிடையே, தன்னுடைய நாவல் கதையில் விஜய் அடுத்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என 'தி ஹைவே மாபியா' என்ற நாவலை எழுதியுள்ள பெண் எழுத்தாளரான சுசித்ரா ராவ் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய நாவல் கால்நடைகள் கடத்தலைப் பற்றிய ஒரு கதை. அந்தக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் நாயகன், அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என நிஜ சம்பவங்களுடன் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். அரசியல், க்ரைம் என ஒரு சினிமாவுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்தக் கதையில் உள்ளது.

இந்தக் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். சில தயாரிப்பு நிறுவனங்களும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்கள். இந்தக் கதையின் நாயகன் கதாபாத்திரமான அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு தமிழில் விஜய் நடித்தால்தான் மிகப் பொருத்தமாக இருக்கும். அவருடைய ஸ்டைல் இந்தக் கதாபாத்திரத்தை மேலும் சிறப்பாக்கும்.

அது போலவே தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யாஷ் ஆகியோர் நடித்தால் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும்,” என்றார்.

தமிழில் நாவல்கள் படமாவது குறைந்து வரும் இந்தக் காலத்தில் இந்தப் பெண் எழுத்தாளரின் முயற்சி நிறைவேறினால் ஒரு வித்தியாசமான படம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மூலக்கதை