அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்: போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்: போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் 2017ம்  ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் விரிவான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

போராட்டம் நடத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில், வருகிற 22ம் தேதியில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்றும், 23 மற்றும் 24ம் தேதி வட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது, 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது, 26ம் தேதி சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.



இதையடுத்து, நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கே இந்த போராட்டம் தொடங்கிவிடும்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டதை முறியடிக்கும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது.

குறிப்பாக போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும் இடைநிலை ஆசிரியர்களை முன்கூட்டியே கைது செய்வது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் தற்காலிக நியமிப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை