குடியரசு தின விழாவில் குழப்பம்: காலிஸ்தான் அமைப்பு திட்டம்

தினமலர்  தினமலர்
குடியரசு தின விழாவில் குழப்பம்: காலிஸ்தான் அமைப்பு திட்டம்

சண்டிகர்: அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடக்க உள்ள, இந்தியக் குடியரசு தின விழாக்களின்போது, குழப்பம் ஏற்படுத்த, சீக்கிய பிரிவினைவாத அமைப்பான, காலிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா, வரும், 26ல் கொண்டாடப்பட உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், அங்கு, குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அமெரிக்காவில், வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ மற்றும் அட்லாண்டாவில், குடியரசு தின விழாக்கள் நடக்க உள்ளன.

அதேபோல், கனடாவின் ஒட்டாவா, வான்கோவர், டொரன்டோவிலும் குடியரசு தின விழா கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான, நீதிக்கான சீக்கியர் அமைப்பு, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

'அமெரிக்கா மற்றும் கனடாவில் நடக்கும் குடியரசு தின விழாவில் குழப்பம் ஏற்படுத்தும், காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் கவுரவிக்கப்படுவர்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசு தின விழா நடக்கும் பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய, அங்குள்ள இந்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை