தடையை நீக்கியது மத்திய அரசு பூடான், நேபாளம் செல்ல ஆதாரை பயன்படுத்தலாம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: ‘பூடான், நேபாளம் நாடுளுக்கு செல்வதற்கு ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பூடான், சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்துடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாட்டில் 60 ஆயிரம் இந்தியர்கள் நீர்மின் நிலையங்கள், கட்டுமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நேபாளம் 1,850 கிமீ எல்லையை சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. நேபாளத்தில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து தினமும் 10 ஆயிரம் பேர் வரை நேபாளத்துக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்வதற்கு பாஸ்போர்ட், தேர்தல் ஆணைய அடையாள அட்டையை ஆவணமாக காட்டினால் போதுமானது. விசா பெறும் நடைமுறை தேவையில்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய அரசின் சுகாதார அட்ைட, ரேஷன் கார்டு ஆகியவற்றையும் அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, இந்த அடையாள ஆவணங்கள் வரிசையில் ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரச சமீபத்தில் தெரிவித்திருந்து. தற்போது, இந்த தடையை நீக்கியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், “ நேபாளம், பூடான் செல்லுவோருக்கான அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் அட்டையும் சேர்க்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்குட்பட்டவர்கள் அதிகாரப்பூர்வ பயண ஆவணமாக ஆதார் அட்டையை காட்டலாம்” என்றார்.