குமாரசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் யோசனையில் பாஜ தலைமை உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க, பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம் மூன்று முறை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா புதிய வழிகளை அவர் தேடி வருகிறார்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நான்கு பேர் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் உட்பட மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கவும் முயற்சி நடக்கிறது. கடந்த 6 நாட்களாக அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள சொகுசுவிடுதி ஒன்றில் தங்கியுள்ள பாஜ எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்புகிறார்கள். புறநகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து அவர்களுடன் இன்று மாலை அல்லது நாளை காலை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.