கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு அமைச்சர் பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைப்பதற்கான  முடிவு,  10- வது உலகத்தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

10-வது உலகத்தமிழ் மாநாடு, வருகிற  ஜூன் மாதம் 4-ம் தேதி சிகாகோ நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில்  நடைபெற்றது. 

இதில் 10-வது உலகத் தமிழ் அராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா, வட அமெரிக்கத் தமிழ்ச்ச்சங்கப் பேரவையின் 32வது தமிழ் விழா ஆகியவை குறித்த தகவல்கள் பகிரப்பட்டன. 

10-வது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தவுள்ள நிர்வாகக்குழு சார்பில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, உலகத் தமிழாய்வு மன்றத்தின் உதவித் தலைவர்  முனைவர்.பொன்னவைக்கோ , திரு. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன், நடிகர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டஎழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:
``இன்றைக்கு தமிழ்ச் சமூகம் போன்ற நெடிய பாரம்பரியம் மிக்க சமூக வரலாற்றின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதேநேரத்தில் தமிழ்ச் சமூகம் பற்றிக் கண்டறியப்படும் புதிய விஷயங்களை  வெளியில் சொல்ல முடியாத சூழலிலும் இருக்கிறோம். அவை வெளியில் வருவதற்கு இதுபோன்ற அமைப்புகள் நடத்தும் மாநாடுகள் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

`இந்தியா டுடே' கட்டுரையில் `ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஓர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஓர் எலும்புக்கூட்டை ஆய்வுசெய்தபோது, அது சிந்துவெளி நாகரீகக் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் எலும்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அந்தக் கண்டுபிடிப்பை வெளியிட 6 மாதகாலம் போராட வேண்டி இருந்தது. அந்த மரபணு, இன்றைக்குத் தமிழகத்தில் தோடர் பழங்குடி மக்களின் மரபணுவுடன் பொருந்துகிறது. இந்த முடிவு, மொத்த இந்திய வரலாற்றின் முடிவில் மிக முக்கியமான மாறுதலை உண்டாக்கக் கூடியது.

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுக் கண்டுபிடிப்புகள், இந்திய மானுடவியல் வரலாற்றின் மிக முக்கியமான மாற்றங்களை உண்டு பண்ணக்கூடியவை. அவற்றை சரியாகப் பிடித்துக் கொண்டு அடுத்தகட்டத்துக்கு நடத்த வேண்டிய பொறுப்பு, பல்வேறு அமைப்புகளுக்கு இருக்கிறது. அதை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வாக இந்தச் சந்திப்பும், இதையடுத்து நடைபெற இருக்கிற உலகத்தமிழ் மாநாடும் அமையும் என நினைக்கிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆழி செந்தில்நாதன் பேசியதாவது:
``தமிழனுடைய மிக முக்கியமான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டு இருக்கிறோம். உலகமயமாதலில், உலகின் பல நாடுகள், ஒரே ஒரு உலகமயமாதலை கூடக் கடக்காமல் இருக்கின்றன.
 தமிழ்ச் சமூகம், சங்ககாலம், காலனிகாலம், தற்போதைய காலம் என 3 உலகமயமாதலைச் சந்தித்து மிக முன்னேறிய சமூகமாக இருக்கிறது. ஆனால், அந்த மாண்பின் திறனை உணராமல் இருக்கிறது. 
இந்த மாநாடு, தமிழர்கள் தாங்கள் இழந்த மாண்பை, இறையாண்மையை, அரசியல் கலாசாரா மரபை மீட்பதாக இருக்கும் எனக் கருதுகிறேன். தன்னுடைய அறிவினால் தமிழ்ச் சமூகம் மீளும் காலகட்டத்தில் இருக்கும் சூழலில், இந்த மாநாடு ஒரு பெரிய அறிவுத் திருவிழாவாக இருக்கும்.”இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சந்திப்பில், பேரவைத் தலைவர் `கீழடி – நம் தாய்மடி’ என்ற மையப்பொருளில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும், அதன் நிகழ்ச்சிநிரல் குறித்தும் பேசினார்.

`மாநாட்டுக்காக அனுப்பப்பட்ட 1,500 கட்டுரைகளில் 200 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இந்தக் கட்டுரைகள், நான்கு நான்கு அமர்வுகளாக இரண்டு நாளில் வாசித்து முடிக்கப்படும். இதோடு உலகத் தமிழர்கள் வர்த்தக மாநாடும் நடைபெற உள்ளது' என்பன போன்ற பல செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: 
3 அமைப்புகளை இணைத்து ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு பல்வேறு சவால்களைச் சந்தித்து இருந்தாலும், இத்தனை வருடங்கள் கடந்திருப்பது மகிழ்ச்சியானது.
நான் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் தெரிந்து கொள்ள விரும்பிய நிறுவனம் இதுதான். இந்த மாநாட்டோடு உலகத் தமிழர்களின் வர்த்தக மாநாடும் நடத்தப்படும். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டு, அவர்கள் கூடுவதற்கு முக்கியமான ஓர் இடமாக இந்த மாநாடு இருக்கும்.

இந்தச் சங்கத்துக்காக 75 பேர் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவது என்று அறிவித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொள்கையாக அமைத்து 2ஆண்டுகள் ஆகின்றன. அதைச் செயல்படுத்த இந்த மாநாடு மையமாக இருக்கும்.

மாநாட்டின் மையக்கருத்தாக `கீழடி - நம் தாய்மடி' என்று சொல்லி இருப்பதால், கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முயற்சிக்கான முடிவை வெளியிடும் ஒரு முக்கியமான நிகழ்வும் இந்த மாநாட்டில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

சித்தாந்த ரீதியிலான பல தடைகள் நீக்கப்பட்டு கீழடியில் இன்னும் 6 மாதங்களுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதை நோக்கித்தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். கீழடியைத் தொடர்ந்து கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் நமது வரலாற்றை இணைத்துப் பேசக்கூடிய சூழல் இனி உருவாகும்.

மாநாடு நடக்கும் இந்த 4 நாட்களும் தமிழக அரசின் பங்கெடுப்பு என்ன என்பதை முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு எந்த அளவுக்கு உதவினார்களோ, அதைவிட பெரிய அளவில் இந்த மாநாட்டுக்கும் உதவிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஹார்வேர்டு இருக்கை அமைக்க தமிழக அரசு உதவியதுபோல, இந்த மாநாடு வெற்றி பெறவும் தமிழக அரசு சார்பாக முழுமையான ஒத்துழைப்புத் தருவோம்."
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

மூலக்கதை