மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியது: அரசு ஊழியர் இடமாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியது: அரசு ஊழியர் இடமாற்றம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்வது தொடர்பாக, அனைத்து மாநில தலைமை செயலர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் இடமாற்றம் மற்றும் நியமனம் தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் ஏழு முதல் 10 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டு மே 2வது வாரத்தில் புதிய மத்திய அரசு அமைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

தேர்தல் முன்ேனற்பாடுகள் தொடர்பாக கடந்த வாரம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனையை தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் நடத்தியது. அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமல், தேர்தல் தேதி அட்டவணை தயாரித்தல், பாதுகாப்பு வசதிகள், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், மக்களவை பதவிக்காலத்துடன், ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகள் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதால், அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படுவது குறித்தும், ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

அதை தொடர்ந்து, தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் நடத்தும் பணியில் நேரடி தொடர்புடைய அதிகாரிகள், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியில் இருக்கக்கூடாது என்ற உறுதியான கொள்கையை தேர்தல் கமிஷன் பின்பற்றி வருவதால், அதன்படி புதிய உத்தரவை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ளது. அதன் விபரம் வருமாறு: மக்களவை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் பணியில் உள்ள அதிகாரிகள், ஒரு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டு காலத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது வருகிற மே 31ம் தேதி அங்கு 3 ஆண்டு பணியை நிறைவு செய்பவர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

அதன்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது, அவர்களை அவர்களது சொந்த மாவட்டத்தில் நியமிக்க கூடாது. அதுபோல், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும், அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும் கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதிக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின்போது பணியாற்றிய இடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்படக்கூடாது.

அங்கு நீடிக்க அனுமதிக்கப்படக்கூடாது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும்.

அதன்பின் தேர்தல் கமிஷன் உரிய உத்தரவு பிறப்பிக்கும். இந்த உத்தரவு, தேர்தல் பணிக்கென விசேஷமாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புடைய மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், இணை கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் போலீஸ் துறையில் ஐஜி முதல் எஸ்ஐ வரை பொருந்தும்.

ஆனால், கம்ப்யூட்டர் தொடர்பான அலுவலக பணிகளை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு பொருந்தாது.

தேர்தல் பணியுடன் நேரடி தொடர்பு இல்லாத டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த இடமாறுதல் கொள்கை பொருந்தாது. இருப்பினும், யாராவது பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தால், அவர்களை இடமாறுதல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிடலாம்.

மண்டல அதிகாரியாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இருப்பினும், அவர்கள் பாரபட்சமின்றி கடமை ஆற்றுகிறார்களா என்பதை தலைமை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் மாநில தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு சிபாரிசு செய்யப்பட்ட அதிகாரிகளை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் நியமிக்கக்கூடாது.

நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் அதிகாரி, அலுவலர்களை தேர்தல் பணியில் நியமிக்கப்படக்கூடாது.

மாற்றப்பட்ட அதிகாரிக்கு பதிலாக, புதிதாக ஒருவரை நியமிக்கும்போது, தலைமை தேர்தல் அதிகாரிகளை கலந்தாலோசனை செய்ய வேண்டும். மாறுதல் உத்தரவின் நகலை அவரிடம் அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் உள்ள அதிகாரிகளை இடமாறுதல் செய்வதாக இருந்தால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும். அதேபோல், இன்னும் 6 மாதத்துக்குள் ஓய்வு பெறும் அதிகாரிகள், தேர்தல் தொடர்பான பணியில் இருந்தால், அவர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு தேர்தல் பணி எதுவும் வழங்கப்படாது. பணி நீட்டிப்பு மற்றும் மறுநியமனம் மூலம் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கிடையாது.

இந்த உத்தரவுகளை பின்பற்றுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் பணி அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பொய்யான வாக்குறுதி அளிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இடமாறுதல், நியமனம் ஆகியவற்றை பிப்ரவரி 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளை மார்ச் மாதம் முதல் வாரத்துக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை