அங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது!

தினமலர்  தினமலர்
அங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது!

வாலாஜாபாத்:'மான்டிசொரி' கல்வி முறையில், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை, அங்கன்வாடி மையங்களில், அரசு துவக்க உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 119 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும், 21 முதல் இந்த புதுக் கல்வி முறையில் பாடங்கள் துவங்க உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2012 அங்கன்வாடி மையம், 194 குறு மையங்கள் என, மொத்தமாக, 2,206 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இம்மையங்களில், தினசரி சத்தான உணவு மற்றும் முட்டை ஆகிய ஒருங்கிணைந்த ஊட்டசத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், குழந்தைகளின் உளவியல் சார்ந்த செயல்வழி கல்வி கற்பிப்பதில்லை. இதனால், குழந்தைகளை தனியார் பள்ளிகளில், பிரைமரி வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை தவிர்க்க, அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும், அரசு அங்கன்வாடி மையங்களில், மான்டிசொரி கல்வி முறை அறிமுகமாக உள்ளது.முதற்கட்டமாக, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளில், இந்த பாடத்திட்டம் துவங்கப்பட உள்ளது.அதன்படி, தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில், மான்டிசொரி கல்வி முறையில், வகுப்புகள் துவக்கவிருக்கிறது. கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளி சீருடை, காலணிக்கு, 7.73 கோடி ரூபாய் நிதி ஒதுங்கீடு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை, 119 நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும், அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், பள்ளி கல்வித்துறையில், உபரியாக இருக்கும் பெண் இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கபட உள்ளனர்.இவர்கள், மான்டிசொரி கல்வி முறையில், குழந்தைகளுக்கு, செயல் சார்ந்த கற்றலை கற்பிக்க உள்ளனர்.இதன் மூலமாக அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் கற்றல் மேம்பாடு அதிகரிக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என, கல்வித் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.நியமனம்'சமக்ரா சிக் ஷா' என, அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கல்வியில், உபரியாக இருக்கும் இடை நிலை ஆசிரியைகளை நியமிக்க உள்ளோம். இவர்கள், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் செயல் சார்ந்த வகுப்புகள் எடுக்க உள்ளனர்.
ஆசிரியை இல்லாத அங்கன்வாடி மையங்களில், இடை நிலை ஆசிரியரை நியமிக்கவிருக்கிறோம்.-ஜே.ஆஞ்சலோ இருதயசாமிமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்இது தான் மான்டிசொரிகுழந்தை பருவத்தில் அறிமுகப்படுத்தப்படும் கல்வி, பல வித முரண்பாடுகள் உடையது. இதை களைவதற்கு, மரியா மான்டிசொரி என்ற இத்தாலி நாட்டு பெண், இந்திய கல்வியில், புதிய புரட்சி ஏற்படுத்தினார்.குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்பு களுக்கு ஏற்றவாறு, சுதந்திரமான சூழ்நிலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் முறையை செயல்படுத்தினார். இதுவே, மான்டிசொரி கல்வி முறை எனப்படும்.

மூலக்கதை