கோஹ்லியின் அபார சதம்! டோனியின் அதிரடி ஆட்டம் - தொடரை சமன் செய்த இந்தியா

PARIS TAMIL  PARIS TAMIL
கோஹ்லியின் அபார சதம்! டோனியின் அதிரடி ஆட்டம்  தொடரை சமன் செய்த இந்தியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார். 
 
ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
 
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.
 
அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 54 ரன்கள் சேர்த்த நிலையில், 43 ரன்னில் ரோகித் வெளியேறினார்.
 
அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு 24 ரன்னில் அவுட்டானார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
 
அடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார்.
 
அவரை தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்து அசத்தினார்.
 
இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது.

மூலக்கதை