அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது.
 
சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதனையடுத்து, 289 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலியா அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
 
இதன்போது இந்தியா அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஹித் சர்மா 133 ஓட்டங்களையும், டோனி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜெய் ரிச்சட்சன் 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் பெரென்டோர்ப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூலக்கதை