பொங்கல் பரிசு பணம் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட்

தினகரன்  தினகரன்
பொங்கல் பரிசு பணம் விவகாரம்  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட்

புதுடெல்லி: ‘பொங்கல் பரிசு வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பின் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என தமிழக அரசு சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த உத்தரவை மாற்றி அமைக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்று பிற்பகல் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், மாநில அரசின் கருத்தை கேட்காமல் அதன் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மூலக்கதை