பா.ஜ.க.வுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி வைக்காது மு.க.ஸ்டாலின் அறிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜ.க.வுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி வைக்காது மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரசார யுக்தி

“வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது, வியப்பாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது.

இந்த 4½ ஆண்டு காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டினை பலப்படுத்தவோ, வலுப்படுத்தவோ எந்த வகையிலும் உதவாத வெறுப்புப் பேச்சுக்களை விதைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டே சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைத்து அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலைசாய வைத்துள்ள பிரதமர் மோடி, தன்னை முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் மட்டுமல்ல வழக்கம் போல அவரது பிரசார யுக்தியாகவே இருக்கிறது.

மக்கள் மறக்க மாட்டார்கள்

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே உன்னத நோக்கத்திற்காக பா.ஜ.க.வும் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்தபட்ட செயல் திட்டம் உருவாக்கிய வாஜ்பாயுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது. நாட்டை பிளவுபடுத்தும் எந்த வேலைத்திட்டத்தையும் முன் வைக்காமல் ஒரு அஜெண்டாவை உருவாக்கி தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்படுத்தியதையும், தி.மு.க.வின் நிலையான ஆதரவுடன் அவர் ஆட்சி செய்ததையும் நாடறியும். பிறகு மதவாதக்குரல்கள் எழுந்தவுடன் அக்கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் தி.மு.க. தான் என்பதையும் நாடறியும்.

ஆனால் தற்போது பிரதமர் நரேந்திரமோடி வாஜ்பாயும் அல்ல, அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றிப் பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பில் இருப்பவரும் அல்ல. முன்பு எந்த பிரதமரும் ஆட்சி செய்தபோது இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது

மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த 4½ ஆண்டுகாலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் தி.மு.க. ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

மூலக்கதை