யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவர்கள்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஒரு சில மாணவர்கள் பாடசாலையில் ஒழுக்க விதிகளை மீறி செயற்ப்பட்டமை குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததன் காரணமாக ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
 
இந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
 
இதனால் குறித்த மாணவர்கள் வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்துள்ளனர்.
 
பின்னர் அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர். இதன்போது வெளியாட்கள் மூன்று பேரைப் பிடித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
 
இச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
இதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
 
பாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை