சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., விலக்கு பெறுவதற்கான, ஆண்டு விற்றுமுதல் வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில அரசுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற, 32வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து, அருண் ஜெட்லி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:தற்போது, ஆண்டு விற்றுமுதல், 20 லட்சம் ரூபாய் வரை உள்ள நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என, பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதையேற்று, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், ஜி.எஸ்.டி.,க்கான விற்றுமுதல் வரம்பை, இரு மடங்கு உயர்த்தி, 40 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதுபோல, வட கிழக்கு மாநிலங்களில், ஜி.எஸ்.டி., விலக்கிற்கு, ஆண்டு விற்றுமுதல் வரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேவை துறை
மேலும், ‘காம்போசிஷன்’ திட்டத்தில், நிறுவனங்களுக்கான, ஆண்டு விற்றுமுதல் வரம்பு, 1 கோடியில் இருந்து, 1.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அத்துடன், இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் சேவை துறை நிறுவனங்களும், 6 சதவீத வரி செலுத்தி இணைய, கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.காம்போசிஷன் திட்டத்தில் இணையும் நிறுவனங்கள், காலாண்டுக்கு ஒரு முறை, வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
கேரள அரசுக்கு, மாநிலங்கள் இடையிலான வர்த்தகத்தில், 1 சதவீதம் இயற்கை இடர்ப்பாட்டு வரி வசூலிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த வரியை, கேரள அரசு வசூலிக்கலாம்.ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி விற்பனைக்கான, ஜி.எஸ்.டி., தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க, இரு குழுக்கள் அமைப்பது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவிப்பு உள்ளதாக, தொழில் கூட்டமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
துணி பைகளுக்கு வரி குறைக்கதமிழக அமைச்சர் கோரிக்கை
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பங்கேற்க வந்த, தமிழக மீன்
வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு சார்பில், 62 பொருட்களை முன்வைத்து, வரி குறைப்பு கோரப்பட்டு, பல பொருட்களுக்கு சலுகை பெற்றுள்ளோம். தீப்பெட்டி தொழிலுக்கு, வரியை, 12 சதவீதம் ஆக்க வேண்டுமென்பதை பரிசீலிக்க, மத்திய அரசு சம்மதித்துள்ளது.
‘வெட் கிரைண்டர்’கள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றுக்கு, 5 சதவீதம் வரை குறைக்க கோரியுள்ளோம். பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு விட்டதால், துணிப்பைகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும், துணிப்பை உற்பத்திக்கு, 5 சதவீதம் மட்டுமே வரி இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம். அலுமினிய பாத்திரங்கள், மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு, 12 சதவீதம் வரை வரி குறைப்பு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.