பாஜக அரசின் கூற்றுப்படி 125 கோடி மக்கள் ஏழைகளாம்; 10% இடஒதுக்கீடு குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்
புதுடெல்லி: மத்திய பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி மக்கள் ஏழைகள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை தான் என்றும், மாதம் ரூ.6000 வருமான பெறுபவரும் ஏழை தான் என்று பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10%இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதா பற்றி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏழையிலும் ஏழைக்கு இட ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள அவர், எல்லோரும் ஏழைகள் என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இதற்கான அரசியல் சாசன 124வது சட்டத் திருத்த மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி, சட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10%இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதா பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.