வடகொரிய அதிபர் சீனா பயணம்: பேச்சுவார்த்தைக்கு ஆலோசனை?
பீஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு திடீர் பயணம் சென்றுள்ளார். மீண்டும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை துவங்கியுள்ள நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிரம்புடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த இவர் ஆலோசனை பெற்றதாக தெரிகிறது.
கடந்த பிப்ரவரியில் வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது.இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் வடகொரியா திடீரென இறங்கி வந்தது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து கிம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவும், அணு ஆயுதங்களை அழிக்கவும் வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் அருகில் இருந்த கிம் எதுவும் கூறவில்லை.
இந்நிலையில் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில், புத்தாண்டில் மக்களிடம் பேசிய கிம், ''நமக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்றாமல், பொருளாதாரத் தடைகள் விதிக்க திட்டமிடுவதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் உங்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் கைவிட்டு புதிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் திடீர் பயணமாக கிம் ரயிலில் பீஜிங் சென்றுள்ளார். அங்கு நான்கு தங்கும் அவர் அதிபர் ஜீஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த ஆண்டும் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன் பீஜிங்கிற்கு கிம் சென்றார். வடகொரியாவின் செயல்களின் பின்னணியில் சீனா இருப்பதாக உலக நாடுகள் கூறிவரும் நிலையில் கிம் சென்றுள்ள இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
வடகொரிய அதிபர் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பச்சை வண்ண பிரத்யேக ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்ஜின் துவங்கி கடைசி பெட்டி வரை ஒரே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பெட்டிகளிலும் ஒரே மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பெட்டியில் அதிபர் இருக்கிறார் என்று தெரியக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதிரி 7 ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்கும்.
கிம்ஜாங் உன்னின் தந்தையான முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல், பாதுகாப்பு காரணங்களால் விமானத்தில் பயணித்ததே கிடையாது. 1994 முதல் 2011 வரையிலான அவரது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 7 முறையும், ரஷ்யாவிற்கு 3 முறையும் சென்று வந்துள்ளார். அனைத்து பயணங்களையும் ரயிலில் தான் அவர் மேற்கொண்டார். ஆனால் தற்போதைய அதிபர் விமான பயணங்களை தவிர்ப்பதில்லை. கடந்த ஆண்டு சீனாவிற்கு முதல்முறை தனது ரயிலில் சென்ற அவர் அடுத்தடுத்து சென்றபோது விமானத்தில் பயணித்தார். சிங்கப்பூரில் டிரம்ப்பை சந்திக்கவும் விமானத்தில் தான் சென்றார். தற்போது சீனாவிற்கு மீண்டும் ரயிலில் பயணித்துள்ளார்.
கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு மெக்சிகோ: மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிர் இழந்தனர்.மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்குள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.படுகாயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.