தேசிய சீனியர் கைப்பந்து போட்டி பஞ்சாப்பை வென்றது தமிழக அணி
சென்னை: தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவு துவக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இப்போட்டிகள் வருகிற 10ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், மகளிர் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவு துவக்க ஆட்டம், நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில், தமிழக அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 27-25, 25-21, 26-24 என்ற கணக்கில் பஞ்சாப் அணியை வென்றது.
முதல் போட்டியிலேயே தமிழக அணி வெற்றி பெற்றது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், ரயில்வே மற்றும் அரியானா அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய ரயில்வே அணி 25-13, 25-13, 25-7 என்ற நேர் செட் கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.