தொல்காப்பியம் தேடி கண்டுபிடித்து மீண்டும் தமிழருக்கும் உலகிற்கும் அளித்த உண்மையான தமிழர்- ராவ் பகதூர் தாமோதரம் பிள்ளை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தொல்காப்பியம் தேடி கண்டுபிடித்து மீண்டும் தமிழருக்கும் உலகிற்கும் அளித்த உண்மையான தமிழர் ராவ் பகதூர் தாமோதரம் பிள்ளை!

தமிழுக்குப் புத்துணர்வும் உயிரும்  ஊட்டியவர் ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவரது நினைவு நாள் ஜனவரி 1.12-09-1832 ல் பிறந்தவர். இலங்கை வாழ் தமிழரான இவரது இயற்பெயர்  சார்லஸ் வின்ஸ்லோ கிங்ஸ்பரி ஆகும்.  இந்துவாக மீண்டும் மதம்  மாறி, சைவமாக இருந்து சென்னை மற்றும்  புதுக்கோட்டையில் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றியவர். 

பண்டைய சங்கத்தமிழ் நூல்களைச் செல்லரித்து அழிந்து போகாமல், தமது அரிய தேடல்கள் மூலம் மீட்டுக் காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்தவர். 

தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் அருமை, பெருமைகளை அதமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு செயல்பட்டவர்.  தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி என்று கூடச் சொல்லலாம்.

இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்கள் மற்றும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தார். தனது 12-வது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினரியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். 

அதன் பின்னர் 1852-ல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் அழகுசுந்தரம் தமிழாய்வாளர் ஆவார். 

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், 'தமிழ்ப்_பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார். 

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ்நாட்டில் நடத்திவந்த 'தினவர்த்தமானி' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றினார். 

1858- ல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது இளங்கலை பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியர் ஆனார்.  அதன்பின் அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் ஆனார்.  அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது. 

தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871- ல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1884 -ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். 6 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளை,1895-ம் ஆண்டில் அரசு வழங்கிய  'ராவ் பகதூர்' பட்டம் பெற்றார். 

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாமல், அன்று இழக்கப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தை, தனது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடித்து,  அதனை  அச்சிட்டு தமிழ்நாட்டில்,  அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை வியந்து பாராட்டாதவர்கள் எவரும் இருந்ததில்லை.  அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் தெரிவித்தது. தமது 69- வது வயதில், 1901 ஜனவரி முதல் தேதி சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம் பிள்ளை மறைந்தார்.

நீதிநெறி விளக்கவுரை, தொல்காப்பியச் சொல் அதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868), வீரசோழியம் (1881) திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப்பொருள்,தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரை,கலித்தொகை, இலக்கண விளக்கம்,சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகார நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றைப் பதிப்பித்தார்.

கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், வசன சூளாமணி,நட்சத்திர மாலை, ஆறாம் வாசகப் புத்தகம்,  ஏழாம் வாசகப் புத்தகம்ஆதியாகம கீர்த்தனம்,  விவிலிய விரோதம், காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி ஆகிய  புதினம் இவர் இயற்றியவை ஆகும்.

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் சி.வை. தாமோதரம் பிள்ளை மறைவிற்கு இரங்கற்பா வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.ஒவ்வொரு தமிழனும்  இவரை நினைவுகூர்வது  கடமை ஆகும். வலைத் தமிழ் அவரது நினைவைப் போற்றுகிறது!

மூலக்கதை