பிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் பதவி ஏற்ற நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதற்கிடையே, ‘என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்கமாட்டேன்’ என, அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதிபர் சிறிசேனாவுக்கு எதிரான படுகொலை சதி விஷயத்தைக் கூட ரணில் கண்டுக்கொள்ளவில்லை என,  குற்றம் சாட்டப்பட்டது.

கோபம் அடைந்த அதிபர் சிறிசேனா, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார்.

ஆனால், 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேயால்  பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை.

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரணில் மனு செய்தார்.

அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ராஜபக்சே பிரதமராக செயல்படவும், இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது.

இலங்கை நாடாளுமன்றம் ஐக்கிய தேசியக் கட்சி எம்பி சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம். பி. க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக  ஓட்டளித்தனர்.

இதனால், நம்பிக்கை தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சஜித் பிரேமதாசா வலியுறுத்தினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என கூறினர். கடைசிக் கட்ட முயற்சியாக, தனக்கு எதிராக பிறப்பித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜபக்சே மனு செய்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம். ராஜபக்சேவின் அப்பீல் மனுவை ஜன. 16ம் தேதி முதல் விசாரிப்பதாக கூறியது.

இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பிரதமராக ரணில் நேற்று மீண்டும்  பதவி ஏற்றார்.

30 உறுப்பினர்கள் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிபர் சிறிசேனா கூறியதாவது: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், பிரதமராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எனினும், ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை ஏற்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

கடந்த காலப்பிரச்னைகளுடன் பார்க்கும்போது, எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை. ‘கடாபியைப் போல் இழுத்துச் சென்று என்னைக் கொல்ல வேண்டும்’ என ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களும், என். ஜி. ஓ. காரர்களும் எச்சரித்தனர்.

என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது. அவ்வாறு வருபவர்களை நான் தடுக்கமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


.

மூலக்கதை