ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்,   ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.   இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. கடந்த அக்டோபரில், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கினார் சிறிசேனா.

இதையடுத்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

 

பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

ராஜபக்சே பிரதமராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றதில் ரணில் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மொத்தமுள்ள 225 எம்பிக்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்ததால் அவர் வெற்றி பெற்றார்.

ரணிலை பிரதமராக்க மறுத்துவிட்ட சிறிசேனா, நாடாளுமன்றத்தை கலைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘‘நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’’ என நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.

இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில், பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிறிசேனா தள்ளப்பட்டார்.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க சிறிசேனா சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்கிறது.

.

மூலக்கதை