மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை : விஜய் சேதுபதி

தினமலர்  தினமலர்
மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை : விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கிய தெற்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதையடுத்து அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த அவருக்கு, சீதக்காதி 25வது படமாகியிருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். டிசம்பர் 20ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி பேசும்போது, 25வது படம் என்றதும் நான் பெரிதாக வித்தியாசமான கதையில் தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அதுவாக அமைந்து விட்டது. இந்த கதையை ஏற்கனவே என்னிடம் பாலாஜி தரணீதரன் சொல்லியிருந்தார். அதன்பிறகு அவர் என்னை அழைக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் மீண்டும் அழைத்து சீதக்காதி படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் தான் முன்பே அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்து விட்டேனே என்று சொன்னதை அடுத்து படம் தொடங்கியது.

இந்த சீதக்காதியில் 17 நாடக கலைஞர்கள் நடித்துள்ளனர். அதில் மணி என்ற நடிகர் 87 வயதுடையவர். இந்த படத்தில் நான் 75 வயது கேரக்டரில் நடிப்பதால் அந்த மணி என்ற 87 வயது நாடக கலைஞரைத் தான் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு நடித்தேன். அவரது நடை உடையை பின்பற்றினேன். இது 25வது படம் என்றபோது சொல்ல முடியாது மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. அந்த அளவுக்கு மித மிஞ்சிய சந்தோசத்தில் இருக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி.

மூலக்கதை