பாஜ உண்ணாவிரத பந்தல் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ உண்ணாவிரத பந்தல் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி பாஜ பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மனாபன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இன்று 3வது நாளாக அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரத பந்தலில் அவருடன் பாஜவை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1. 30 மணியளவில் பந்தலின் நேர் எதிரே உள்ள கட்டிடம் முன் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். இதை பார்த்த பாஜ தொண்டர்கள் கூக்குரலிட்டனர்.



இதைக்கேட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதற்கு முன்பு அந்தநபர் தனது உடலில் தீவைத்துவிட்டு எரியும் நெருப்புடன் போராட்ட பந்தலை நோக்கி ஓடிவந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மற்றும் பாஜ தொண்டர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் முதல்கட்ட விசாரணையில் அவர் திருவனந்தபுரம் முட்டடை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என தெரியவந்துள்ளது.

அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை