ரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி! பதவியை இழக்கும் சம்பந்தன்?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை கூட்டமைப்பு இழந்து விட்டது.
இந்த நாடாளுமன்றம் தொடருமானால், எதிர்க்கட்சி என்ற பதவியில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும்.
அதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடியை நிறைவேற்று அதிகாரமே, நீதித்துறையோ, நாடாளுமன்றமோ தீர்க்க முடியாது.
பொதுத்தேர்தல் ஒன்று தான் இதனைத் தீர்க்கக் கூடியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.