கூகுளில் அரசியல் பாகுபாடு இல்லை : சுந்தர் பிச்சை
நியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சீனாவில் புதிய தேடுபொறியை துவங்க கூகுள் திட்டமிட்டுள்ளது எனவும், அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அமெரிக்க பார்லி., விசாரணை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள சுந்தர் பிச்சை, அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை. அனைத்து விதமான கருத்துக்களையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது.
ஆங்கிலத்தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வருவதற்கு காரணம், வேண்டுமென்றே அப்படியொரு தவறை கூகுள் நிறுவனம் செய்யவில்லை. தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகளை சேர்த்துள்ளோம். உடனடியாக சீன தேடுபொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள், பேச்சுக்களை தணிக்கை செய்தே கூகுள் பதிவிடுகிறது என தெரிவித்துள்ளார்.