நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி

தினமலர்  தினமலர்
நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி

புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 15.7 சதவீதம் அதிகம்.இதே காலத்தில், வரி கணக்கு தாக்கல் செய்தோருக்கு திரும்ப அளிக்கப்பட்ட, கூடுதலாக செலுத்திய தொகை, 20.8 சதவீதம் அதிகரித்து, 1.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 11.50 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதில், மதிப்பீட்டு காலத்தில், நிகர அளவில், 48 சதவீதம் வசூலாகி உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட மொத்த வரி, 17.7 சதவீதம் உயர்ந்துள்ளது. தனி நபர் வருமான வரி வசூல், 18.3 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், தன் விருப்பத்தின் பேரில் வருவாய் விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தில், 10,833 கோடி ரூபாய் வசூலானது.இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை