மகள் திருமணத்துக்காக 100 விமானங்களை வாடகைக்கு எடுத்தார் தொழிலதிபர் அம்பானி: பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நட்சத்திரங்கள், விஐபி.க்கள் வருகை

தினகரன்  தினகரன்
மகள் திருமணத்துக்காக 100 விமானங்களை வாடகைக்கு எடுத்தார் தொழிலதிபர் அம்பானி: பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நட்சத்திரங்கள், விஐபி.க்கள் வருகை

உதய்பூர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன்னுடைய மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெண்ணுக்கு மருதாணி வைக்கும் நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்துக்காக 100 விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியும், கடந்த தேர்தலில் அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஹிலாரி கிளின்டனில் இருந்து, பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நட்சத்திரங்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விஐபி.க்கள் இதில் கலந்து கொண்டு வருகின்றனர்.இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷாவுக்கும், மணமகன் ஆனந்த் பிரமளின் திருமணம் நாளை மும்பையில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இவர்களின் பல்வேறு சடங்குகள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, ராஜஸ்தானின் உதய்பூர் அரண்மனையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ேநற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் அரண்மனை வளாகம், பூக்கள் மற்றும் தோரணங்களால் பிரமாண்டமாக அழகுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், இரவில் ஜொலிக்கும் வகையில் மின்னலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியும், அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவருமான ஹிலாரி கிளின்டன் கலந்து கொண்டார். இதேபோல், ஹாலிவுட் நடனக்கலைஞர் பியான்ஸ் நேற்று தனது குழுவினருடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார். ஏற்கனவே பெண்ணுக்கு மருதாணி வைக்கும் நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் பாடலுக்கு நடனமாடினார். ஏராளமான நடிகைகள், நடிகர்கள், விவிஐபி.க்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.மும்பையில் இருந்து விஐபி.க்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சுமார் 100 விமானங்களை தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளாராம். இதனால் வெறும் 12 விமானங்களே வந்து செல்லக்கூடிய உதய்பூர் நகர விமான நிலையம், விழிபிதுங்கி நிற்கிறது. மேலும், நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்காக நட்சத்திர ஓட்டல்கள் முதல் கார்கள் வரையில் பார்த்து, பார்த்து செய்துள்ளதுடன், பணத்தை தண்ணீராக வாரி இறைத்துள்ளாராம். நாளை அம்பானியின் வீட்டிலேயே இஷா - ஆனந்த் பிரமளின் திருமணம் நடக்க உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில விவிஐபிக்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாகத்தான் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் அனைத்து விஐபி.க்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.மணமக்களுக்கு தயாராகும் 450 கோடி பங்களாமுகேஷ் அம்பானியின் மருமகன் ஆகப்போகும் ஆனந்த், பிரமள் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமளின் மகனாவார். முகேஷ் அம்பானி அளவுக்கு இல்லாவிட்டாலும், இவரும் கோடீஸ்வரர்தான். அம்பானியின் பிரமாண்ட மும்பை வீட்டில் வசித்த இஷா, தனது வீட்டில் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மும்பையின் ஒர்லி பகுதியில் கடலை பார்த்தபடியான சொகுசு பங்களாவை அஜய் பிரமள் தயார் செய்து வருகிறார். 2012ல் இந்த 50,000 சதுரஅடி வீடு ஏலத்துக்கு வந்தபோது, இதை அஜய் பிரமள் வாங்கி உள்ளார். தற்போது அதை தன் மகன், மருமகளுக்காக தயார் செய்து வருகிறார். இந்த பங்களாவின் மதிப்பு மட்டும் 450 கோடியாம்.

மூலக்கதை