ரஜினி, முருகதாஸ் படம் இன்னும் முடிவாகவில்லை?
'சர்கார்' படத்திற்குப் பிறகு ஏஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என தகவல் வெளியானது. ஆனால், இதுவரை தன் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற தகவலை முருகதாஸே வெளியிட்டுள்ளார்.
'பேட்ட' படத்தில் நடித்த பின் ரஜினிகாந்த் புதிய படம் எதிலும் நடிக்க இன்னும் சம்மதிக்கவில்லை என்றே தெரிகிறது. அடுத்த வருடம் மே மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கவும் வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு, தன் பிறந்தநாளின் போது அரசியலில் இறங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தன் அரசியல் நுழைவைப் பற்றி அன்றைய தினம் ரஜினிகாந்த் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதன்பிறகே ரஜினி, அடுத்து புதிய படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது தெரிய வரும். அரசியலில் இறங்கினால், பார்லிமென்ட் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும், போட்டியிடவும் சூழல் உருவாகலாம். எனவே, அதற்குப் பிறகு அவர் நடிக்க சம்மதிம் சொல்லலாம். எப்படியோ, ரஜினியின் அடுத்த மூவ் என்ன என்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.