மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிடப்போவதில்லை: கர்நாடகா அரசு திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிடப்போவதில்லை: கர்நாடகா அரசு திட்டவட்டம்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 27-ம் தேதி கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இதற்கிடையே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றி விவாதிக்க உடனடியாக தமிழக சட்டப்பேரவையை கூட்ட  வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராகவும், தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த பகுதியிலும் புதிதாக  அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேசினர். இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது என்றும் நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை