மான நஷ்டவழக்கு கெய்லுக்கு ரூ1.52 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மான நஷ்டவழக்கு கெய்லுக்கு ரூ1.52 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

சிட்னி: மானநஷ்ட வழக்கில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு ரூ. 1. 52 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பேர்பேக்ஸ் மீடியா குழுமத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மசாஜ் தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், வீரர் கிறிஸ் கெய்ல் அறைக்கு சென்றதாகவும், அப்போது அந்த பெண்ணை கிறிஸ் கெய்ல் ஆபாசமாக பேசியதாகவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.



இதில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்த கிறிஸ் கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில், பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

இவ்வழக்கில் இழப்பீடு தொகை குறித்த விவரம் எதையும் அப்போது நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கிறிஸ் கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ. 1. 52 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.  

.

மூலக்கதை