கஜா புயல் பாதிப்பிற்கு ரூ 10 கோடி நிவாரண நிதி வழங்க கேரள அமைச்சரவை தீர்மானம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு 10 கோடி நிவாரண நிதி வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

கஜா புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசு சார்பில் உணவுப் பொருட்கள், துணி வகைகள் உட்பட 14 லாரி அத்தியாவசியப் பொருட்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

மேலும் 6 மருத்துவ குழுவினரும், கேரள மின்வாரியத்தை சேர்ந்த 72   ஊழியர்களும் தமிழகம் விரைந்து நிவாரண பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தன்னார்வலர்களும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில், கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 10 கோடி  உடனடியாக வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிதியுதவி குவிந்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கேரள கவர்னர் சதாசிவம் தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்  வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை அவர் தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு  அனுப்பியுள்ளார்.

மூலக்கதை