சிக்கலான நேரங்களில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நிறுவனம் மோசமான செய்தியால் பாதிப்புக்குள்ளாகும் போது, அந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஓர் அலசல்.
அண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை மூலம் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பான செய்தி, வங்குத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இந்த செய்தியை அடுத்து, வங்கியின் பங்குகள் விலை சரிந்துள்ளது. இந்த செய்தியில் தொடர்புடைய கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிந்துள்ளன. இது போன்ற மோசமான செய்தி ஒரு நிறுவன பங்குகள் விலையை பதம் பார்ப்பது இது முதல் முறை அன்று. பத்தாண்டுகளுக்கு முன், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் முறைகேடு தொடர்பான செய்தி வெளியான போது அதன் பங்குகள் சரிந்தன. பின்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளான போதும் அதன் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.
அலசி ஆராயுங்கள்!
மோசடி, முறைகேடு உள்ளிட்ட மோசமான செய்திகளால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வருவது தொடர்பான கேள்விகள் ஒருபுறம் இருக்க, இந்த நிறுவன பங்குகளை வாங்கி வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு வேறு விதமான சிக்கலை ஏற்படுகின்றது. இது போன்ற சிக்கலான நேரங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமும், பீதியும் ஏற்படுவது இயல்பானது தான். அவர்கள் முதலீட்டை தொடர்வது சரியாக இருக்குமா; அல்லது வெளியேறுவது ஏற்றதாக இருக்குமா?
மோசடி அல்லது முறைகேடு எதிர்காலத்தில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்து அறிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை எனில் சில்லரை முதலீட்டாளர்கள் உடனடியாக பங்குகள் விற்று விட்டு வெளியேறுவது சரியாக இருக்கும் என்பது வல்லுனர்கள் கருத்தாக இருக்கிறது.
நஷ்டத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டாலும் வெளியேற வேண்டும் என்கின்றனர். அதே நேரத்தில் நிறுவன பங்கின் தற்போதைய விலையை கருத்தில் கொள்ள வேண்டும்.வெளியேறுவதா, வேண்டாமா என்பது, நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களை பொறுத்து அமையும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். பொதுவாக பங்குகளில் முதலீடு செய்யும் போது, அதன் அடிப்படை அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிறுவன அடிப்படைகள் வலுவாக இருந்து, நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்கும் ஆற்றல் அதன் தலைமைக்கு இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டால், அல்லது அத்தகைய தலைமையால் கையகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தோன்றினால், முதலீட்டை தொடரலாம் என்றும் சொல்கின்றனர்.
நேரடி முதலீடு:
மோசமான செய்தியால் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள், அதன் புள்ளிவிபரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த செய்திகளில் கவனம் செலுத்த வேண்டும். அவை தரும் புரிதல் அடிப்படையில் முதலீட்டை தொடர்வது பற்றி தீர்மானிக்கலாம். இதற்கான சாத்தியம் இல்லை எனில், வெளியேறுவது பொருத்தமான முடிவாக அமையும். எனினும் சில்லரை முதலீட்டாளர்களை பொறுத்தவரை, நிறுவன பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மூலம் பங்கேற்பதே சரியாக இருக்கும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இது போன்ற நேரங்களில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை நிர்வகிக்கும் நிதி மேலாளர் தேவையான முடிவுகளை மேற்கொள்வார். எனினும் நேரடி முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்கள் அதற்கேற்ப எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என, ஆலோசனை சொல்கின்றனர்.