திருப்பதி அருகே ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா?

PARIS TAMIL  PARIS TAMIL
திருப்பதி அருகே ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா?

திருப்பதி அருகே ஏரியில் 7 பேர் உடல்கள் மிதந்தன. இறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

7 உடல்கள் மிதந்தன

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 பேரின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஒண்டிமிட்டா போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 7 ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒண்டிமிட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்களா?

பிணமாக கிடந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினரின் ரோந்தும் தீவிரமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் அங்கு வந்த வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

செம்மரக்கட்டை கடத்தும் கும்பலில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே இறந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்த கும்பலை சேர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகளா? அல்லது இவர்களை முன்விரோதத்தில் கொன்று யாரும் ஏரியில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை