பி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்பு
கோல்கட்டா : ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி, நிரவ் மோடியின் மோசடி காரணமாக, தங்கம் மற்றும் நவரத்தினங்கள் துறையில், சிறிதளவு பாதிப்பு ஏற்படும்,’’ என, ஜி.ஜே.இ.பி., கிழக்கு பிராந்திய தலைவர், பிரகாஷ் சந்திர பின்ச்சா தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:பி.என்.பி.,யில் நடைபெற்ற, 11,400 கோடி ரூபாய் மோசடியால், தங்கம் மற்றும் நவரத்தினங்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, கடன் கொடுக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் தயங்கும் அல்லது மேற்கொண்டு கடன் கொடுப்பதை தாமதப்படுத்தும்.அதனால், இத்துறையில் கடன் புழக்கம் குறையும். அதே சமயம், இப்பிரச்னையால், நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி உட்பட,ஒட்டுமொத்த துறையும்பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.வங்கிகள் மட்டுமின்றி, காப்பீட்டு நிறுவனங்களும், நகை ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டு சேவை வழங்குவதில், இனி எச்சரிக்கையாக இருக்கும். ஏற்றுமதியாளர்களிடம், கூடுதலாக பிணைப் பத்திரங்களை வழங்குமாறு, வங்கிகள் கேட்கலாம்.இந்த மோசடியால், ஒட்டு மொத்தமாக, தங்கம் மற்றும் நவரத்தினங்கள் துறை, அதிக இடர்ப்பாட்டு துறை என, முத்திரை குத்தப்படலாம். அது போன்ற நிலை ஏற்படக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.