மாலத்தீவை தொடர்ந்து எத்தியோப்பியாவிலும் அவசரநிலை பிரகடனம்

தினமலர்  தினமலர்
மாலத்தீவை தொடர்ந்து எத்தியோப்பியாவிலும் அவசரநிலை பிரகடனம்

அடிஸ் அபாபா: அரசியல் நெருக்கடி காரணமாக சமீபத்தில் மாலத்தீவில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எத்தியோப்பியாவிலும் அதே போன்றதொரு சூழல் உருவானதால் அங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் வளர்ச்சி நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அந்நாட்டின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும்வரை ஐலிமரியாம் தேசாலென் பிரதமர் பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், எத்தியோப்பியாவில் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மந்திரிசபையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை