இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பம் விதிமுறைகள் வெளியிட அரசு திட்டம்
புதுடில்லி : ‘‘நாட்டில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தில், தொலை தொடர்பு சேவை தொடர்பான விதிமுறைகள், ஜூன் மாதத்திற்குள் வெளியாகும்,’’ என, தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: உலகளவில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தில், தொலை தொடர்பு சேவைக்கான தர நிர்ணய விதிகளை உருவாக்கும் பணி, இந்தாண்டுக்குள் முடிவடையும். இந்தியாவில், ‘5ஜி’ சேவைக்கான கொள்கை விதிமுறைகளை உருவாக்க, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை, ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என, தெரிகிறது.
இதன் மூலம், உலகளவில், ‘5ஜி’ சேவை, வர்த்தக ரீதியில் துவங்கும் போது, இந்தியாவும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை சுலபமாக பின்பற்றும். இயந்திரங்கள் இடையிலான தொலை தொடர்பு வசதிக்கு, புதிய, ‘சிம்’ எண்களை உருவாக்கும் பணி நடக்கிறது.
ஸ்மார்ட் போனில், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை மூலம், இயந்திரங்கள் இடையிலான தொலை தொடர்பு வசதி பரவலாகும். ‘ஸ்மார்ட் வீடுகள், ஸ்மார்ட் நகரங்கள்’ ஆகியவற்றுக்கு, இத்தொழில்நுட்பம் பயன்படும். ‘சென்சார்’ பயன்பாடு காரணமாக, கார் மற்றும் இதர வாகனங்கள் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.