வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய மூன்று அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புத் தொடரின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியை இன்று சந்திக்கவுள்ளது.
 
பங்களாதேஷ் தலைநகர் மிர்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
சர்வதேச ஒருநாள் அரங்கில் ஸிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
 
புதிய பயிற்றுநர், புதிய தலைவர் என வீராப்புடன் களமிறங்கிய இலங்கை அணி, ஸிம்பாப்வே அணியுடனான போட்டியில் துடுப்பாட்ட வீரர்களது அசமந்தப் போக்கினால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தது. 
 
இதையடுத்து சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் வெகுண்டு எழுந்த பங்களாதேஷ் அணி, கடந்த வெள்ளியன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்து, தமது முன்னாள் பயிற்றுநருக்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
இப்போட்டியில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும்  சோடைபோயிருந்தது. களத்தடுப்பில் இலகுவான பிடியெடுப்புகளை தவறவிடப்பட்டமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  இவ்வாறு இலகுவான பிடியெடுப்புகள் தவறவிடப்படும்போது, பந்துவீச்சாளர்கள் களைத்துவிடுவர் என்பதை மறந்துவிடலாகாது. அத்துடன் துடுப்பாட்டத்தில் தனிநபரொருவர் சதமொன்றை அடிப்பதை பார்க்கிலும், நிலையான இணைப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். 
 
இது இலங்கை துடுப்பாட்ட வீரர்களிடம் காணப்படும் பெரும் குறையாகும். பங்களாதேஷுடனான போட்டியில் குசல் பெரேரா 32 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இருப்பினும் தான் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கையில் 83 பந்துகளுக்கு முகம்கொடுத்தார். ஏன் இந்த நிலைமை என்று ஆராய்ந்து பார்த்தால், அடுத்துவருபவர்கள்  நிலைத்து நின்று விளையாடாமல் தமது விக்கெட்டுகளை தாரை வார்ப்பதுடன், ஓட்ட வேகத்தை சீராக வைத்துக்கொள்ளாமல், மெதுவாக துடுப்பெடுத்தாடுதலாகும். இவற்றிலிருந்து இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தங்களை சரி செய்து, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
 
கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளின் மூலம் பெற்றுக்கொண்ட, பாடங்களை மனதில் நிலைநிறுத்தி எதிர்வரும் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டு விளையாட வேண்டும்.
 
ஸிம்பாப்வே அணிக்கெதிரான தீர்மானமிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த முத்தரப்பு போட்டியில் இலங்கை அணி நிலைத்து  நிற்க முடியும். மாறாக தோல்வியடைந்தால், இலங்கை அணி பங்களாதேஷுடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் பயனற்றதாகி போய்விடும்.

மூலக்கதை