'சபாஷ் நாயுடு' பற்றி தொடர் அமைதி

தினமலர்  தினமலர்
சபாஷ் நாயுடு பற்றி தொடர் அமைதி

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க நடிகர் சங்க வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பமான படம் 'சபாஷ் நாயுடு'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான படம். அமெரிக்காவில் மட்டும் ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதன் பின் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு ஆபரேஷன் ஆனதால் தொடர்ந்து அப்படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்தனர். அதன் பின் அந்தப் படம் பற்றி எந்த சத்தத்தையும் காணோம். தொடர்ந்து அமைதியாகவே இருக்கிறது.

அதே சமயம் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு தயாரித்து நிறுத்திய 'விஸ்வரூபம் 2' படத்தின் வேலைகளை முடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளிவர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அடுத்து இன்று அவருடைய சொந்த நிறுவனத் தயாரிப்பில் 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷ்ராஹாசன் நடிக்கும் புதிய படத்தைப் பற்றியும் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால், 'சபாஷ் நாயுடு' படம் பற்றி கமல்ஹாசன் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். 'தசாவதாரம்' அளவிற்கு 'சபாஷ் நாயுடு' படம் வெளிவரும் எனக் காத்திருக்கும் கமல் ரகிர்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். ஒன்றரை வருடங்களாக படப்பிடிப்பு நடைபெறாத 'சபாஷ் நாயுடு' படம் இனியும் தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மூலக்கதை