ஹபீசிடம் முழு விசாரணை: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
ஹபீசிடம் முழு விசாரணை: அமெரிக்கா

வாஷிங்டன்: பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திடம் முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

நடவடிக்கை இல்லை

மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, தேடப்படும் குற்றவாளியாக, ஐ.நா., அறிவித்துள்ளது. வீட்டுச் சிறையில் இருந்த அவனை, பாக்., அரசு சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஹபீஸ் சயீத்திற்கு எதிராக எந்த வழக்கும் இல்லை எனக்கூறியிருந்தார்.

விசாரணை நடத்த வேண்டும்

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நவுரட் கூறியதாவது: ஹபீஸ் சயீத்திடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் உள்ள உறவு காரணமாக அவனை ஐ.நா., தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது. ஹபீஸ் குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துக்களை பாகிஸ்தான் அரசிடம் தெளிவாக விளக்கியுள்ளோம். அவனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் பிரதமரின் கருத்தை அமெரிக்கா கவனித்துள்ளது. ஹபீசை நாங்கள் பயங்கரவாதியாகவே கருதுகிறோம். அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழக்க காரணமான மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை