வரி குறைப்பு பயனை நுகர்வோருக்கு வழங்காத எச்.யு.எல்.,க்கு, ‘நோட்டீஸ்’
புதுடில்லி : கடந்த, 2017 நவம்பரில், 178 பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டது.
இந்த வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் மீது, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது. இந்த வகையில், இந்த ஆணையத்தின் கீழ் செயல்படும், டி.ஜி.எஸ்., அமைப்பு, ‘மெக்டொனால்டு’ உணவக தனியுரிமை கிளைகள், ஹோண்டா கார் முகவர்கள் உட்பட, ஐந்து நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. அதில், ஜி.எஸ்.டி., பயனை, நுகர்வோருக்கு வழங்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆறாவதாக, பற்பசை, சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட வீட்டு பயன்பாட்டு பொருட்களை விற்பனை செய்யும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திற்கு, விலை குறைப்பு செய்யாதது குறித்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை, 18 சதவீத வட்டியுடன், நுகர்வோருக்கு திரும்பத் தருவதுடன், அபராதமும் செலுத்த வேண்டும்.இதற்கிடையே, கூடுதல் எடையுடன் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வருவதாக, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.