மலை மாவட்ட விவசாய தொழிலில்... தொழிலாளர் பற்றாக்குறை! நூறு நாள் வேலை திட்டம் பலன் தருமா?

தினமலர்  தினமலர்

ஊட்டி;'நீலகிரி மாவட்டத்தில், விளை நிலங்கள் விலை போவதை தடுக்க, விவசாய தொழிலில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நீலகிரியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடியும், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.விவசாயப் பயிர்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைக்காமை, சந்தை வசதியின்மை, தொழிலாளர் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவ மழை தவறுவது என, பல காரணங்களால், விவசாய தொழிலில், பல நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.சமாளிப்பதில் சிக்கல்ஓரிரு பெரிய விவசாயிகள் தவிர சிறு, குறு விவசாயிகள், பொருளாதார நெருக்கடியில் தான், விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான விவசாயிகள், விவசாய தொழிலை கைவிட்டு, தங்களின் விளை நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.பெரிய தேயிலை தோட்ட நிறுவனங்களை பொறுத்தவரை, தோட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு குடியிருப்பு உட்பட வசதிகளையும், தோட்ட நிர்வாகங்களே செய்து கொடுப்பதால், விவசாய தொழிலாளர் பிரச்னை சமாளிக்கப்படுகிறது. ஆனால், சிறு, குறு விவசாயிகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை.காரணம் என்ன?தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இளம் வயது துவங்கி, வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலர் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, தினசரி, 203 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.ஊராட்சிப் பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றுவது, மண் சாலை அமைப்பது, கால்வாய் சுத்தம் செய்வது, மரக்கன்று நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.விவசாயிகள் சிலர் கூறியதாவது:பல ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை உறுதி திட்டப்பணி 'கணக்கு' காண்பிக்க மட்டுமே நடத்தப்படுகிறது. சாலையோரம் உள்ள முட்புதர், செடி, கொடிகளை வெட்டுவது, மண் வேலைகள் செய்வது என, மிக எளிதான பணிகளே வழங்கப்படுகின்றன; கடினமில்லா பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்; பணிச்சுமை என்பது, அவர்களுக்கு மிகக் குறைவு. இத்திட்டத்தின் கீழ், அதிகளவு பணியாளர்களை கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், ஊராட்சி நிர்வாகங்களும் அதிகளவு பணியாளர்களை சேர்த்து கணக்கு காண்பித்துக் கொள்கின்றனர். இதுவும், விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில், நுாறு நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், விவசாய தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் களையெடுப்பது, கால்வாய் வெட்டுவது உட்பட விவசாயம் சார்ந்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போன்று,நீலகிரி உட்பட தமிழகத்திலும், விவசாய தொழிலில், நுாறு நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த, சில ஆண்டுகளுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது; ஆனால், மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நுாறு நாள் திட்டத்தை, விவசாய தொழிலோடு இணைத்தால், விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும்.இவ்வாறு, விசுவநாதன் கூறினார்.

மூலக்கதை