ஆப்கானில் இந்திய தூதரம் மீது குண்டுவீச்சு: உளவுத்துறை எச்சரித்தும் கவனக்குறைவால் தாக்குதல் நடந்ததா?
காபூல்: உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்திய நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு விழுந்துள்ளது. இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தூதரக வேலிக்குள் ராக்கெட் குண்டு விழுந்ததால் கட்டடத்துக்கு சேதம் எதுவுமில்லை. பணியாளர்களும் துளி பாதிப்பின்றி தப்பியுள்ளனர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதே வேலையில் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள பதிவில் மற்ற நாட்டு தூதரங்கங்களும் அதே இடத்தில் இருப்பதால் இந்திய தூதரகத்தின் மீது தான் குறிவைக்கப்பட்டதா என்பது தமக்கு விளங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் டெல்லியில் பதுங்கியிருப்பதாகவும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை ஓரிரு தினங்களுக்கு முன்பு தான் எச்சரித்திருந்தது. அதற்குள் இந்த தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.