புதுமண தம்பதியர் மனதில் கொள்ள வேண்டிய நிதி விஷயங்கள்
*புதிய வாழ்க்கையை துவக்கும் புதுமண தம்பதியர் தங்கள் எதிர்காலம் தொடர்பான பல விஷயங்களை திட்டமிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பலவற்றை மனம் விட்டு பேசவும் செய்கின்றனர். இதில் நிதி விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மணமக்கள் தங்களுக்கான நிதி கொள்கையை வகுத்துக்கொள்வது, எதிர்கால வளத்திற்கு வழிவகுக்கும்.
*மணமக்கள் இருவரும் வேறு வேறு பொருளாதார பின்னணி கொண்டிருக்கலாம். பொருளாதார பின்னணி ஒன்றாக இருந்தால் கூட செலவு பழக்கங்கள் மாறுபட்டிருக்கலாம். எனவே, தங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கை முறை எதிர்பார்ப்புகள் குறித்து மனம்விட்டு பேசி, அதற்கேற்ற பட்ஜெட்டை வகுத்துக்கொள்ள வேண்டும். பொதுவான சேமிப்பு கணக்கு வைத்துக்கொள்வதன் மூலம் குடும்ப செலவுகளை திறம்பட நிர்வகிக்கலாம்.
*எதிர்காலத்தில் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது பற்றி பேசுவது போல், ஏற்கனவே கடன் பொறுப்புகள் இருந்தால் அதை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவேண்டும். கல்விக்கடன் போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். பெற்றோருடன் இணைந்து சொத்துகள் வாங்கியிருந்தாலும் அதை தெரிவிக்க வேண்டும். மாதாந்திர கடன் தவணையை திட்டமிடுவதில் இது உதவும்.பின்னர் பிரச்னை வருவதையும் தவிர்க்கலாம்.
*திருமண உற்சாகத்திற்கு மத்தியில் தங்களுக்கான நிதி இலக்குகளை அமைத்துக்கொள்ளவும் மறக்க கூடாது. நிதி இலக்குகளுக்கான காலம், அவற்றுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்தும் பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கு என்ன அவசரம் என நினைக்காமல், முதலிலேயே நிதி இலக்குகளை தீர்மானித்து செயல்படுவது, செலவு பழக்கங்களை கட்டுப்படுத்தவும் கைகொடுக்கும்.
*தம்பதியரில் இருவருக்குமே நிதி பொறுப்புகள் இருக்கலாம். தங்களை சார்ந்திருப்பவர்களுக்கு பொருளாதார நோக்கில் உதவி செய்ய வேண்டிய சூழல் இருக்கலாம். இது குறித்து வெளிப்படையாக துணையிடம் பேசி விடுவது நல்லது. குடும்பத்தினருக்கு உதவுவது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றாலும், தம்பதியர் இது குறித்து மனம் திறந்து பேசிக்கொள்வது நல்லது.
*திருமணமான பிறகு கணவன், -மனைவியில் ஒருவர் நிதி விஷயங்களை கவனித்துக்கொள்வது வழக்கம். முதலீடு விஷயங்களை பெரும்பாலும் கணவர் கவனித்துக்கொள்ளலாம். ஆனால், கணவன், மனைவி இருவருமே நிதி விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. நிதி முடிவுகளை இருவரும் விவாதித்து கூட்டாக மேற்கொள்வது சிறந்தது. சேமிப்பு, முதலீடு, கடன்கள், காப்பீடு பற்றி இருவரும் அறிந்திருக்க வேண்டும்.