விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினமலர்  தினமலர்
விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : ''தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கடந்த, 10 மாதங்களில், 4,903 கோப்புகள், என் பரிசீலனைக்கு பின் உத்தரவிடப்பட்டுள்ளன. இன்றளவில், என் அலுவலகத்தில், எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.

உயர் கல்வி சேர்க்கையில், தமிழகம், 46.9 சதவீதம் என்ற அளவுடன், முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இது, தேசிய சராசரியான, 25.2 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாகும். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், அதிக அளவிலான, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதற்காக, 2011 முதல் தொடர்ச்சியாக, முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருதை, தமிழகம் வென்றுள்ளது. இந்திய மருத்துவக் குழுமத்தின், புதிய சீரமைப்புகளுக்கு, தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்க, மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 'ஒக்கி' புயலில் சிக்கி, கரை திரும்பாத, கடைசி மீனவர் கிடைக்கும் வரை, தேடும் பணியைத் தொடர, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தின் நிதிநிலை, மத்திய அரசைக் காட்டிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், கட்டுக்குள் நிர்வகிக்கப்படுகிறது.

தமிழகத்தில், புதிய தொழில் முதலீடுகள் பெறப்படுவதை ஊக்குவிக்க, 'தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து, பட்டாசுக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வாணையம், பிப்., 28க்குள் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை, மறுவரையறை செய்வதற்காக, இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை, அரசுக்கு அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தில் விரைவில் நடைபெறும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மூலக்கதை