ஜெ.,வை பார்க்கவே இல்லை என அரசு மருத்துவர்... 'பகீர்!' ; சிகிச்சையும் அளிக்கவில்லை என கமிஷனில் சாட்சியம்

தினமலர்  தினமலர்
ஜெ.,வை பார்க்கவே இல்லை என அரசு மருத்துவர்... பகீர்! ; சிகிச்சையும் அளிக்கவில்லை என கமிஷனில் சாட்சியம்

சென்னை : 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை நான் பார்க்கவில்லை; அவருக்கு, சிகிச்சை அளிக்கவில்லை' என, ஜெ.,க்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கும் குழுவில் இருந்த, அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறியுள்ளார். இது, ஜெ., மரணத்தில், மேலும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அரை மணி நேரம்:

இதுகுறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஜெ., உறவினர்கள், சசிகலா குடும்பத்தினர் என, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற ஜெ.,க்கு இதயம் செயலிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இதய நிபுணர், டாக்டர் சுவாமிநாதன் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நேற்று ஆஜராகி, சுவாமிநாதன் விளக்கம் அளித்தார். அவரிடம், அரை மணி நேரம் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த, சுவாமிநாதன் கூறியதாவது: ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்ததாக கூறப்படும், 2016, டிச., 4ம் தேதி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஐந்து டாக்டர்கள் இருந்தோம்.

'எக்மோ' கருவி:

என்னிடம் கேட்கப்பட்ட மருத்துவ குறிப்புகளுக்கு மட்டும், விளக்கம் அளித்தேன். ஆனால், ஜெ.,வை பார்க்கவும் இல்லை; சிகிச்சை அளிக்கவும் இல்லை. 'எக்மோ' கருவி பொருத்தும் சிகிச்சை உட்பட, ஜெ.,க்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமே செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெ., மரணம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு யூகங்கள் உலவி வரும் நிலையில், தற்போது, டாக்டர் சுவாமிநாதன், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கவே இல்லை என்றும், அவரை பார்க்கவே இல்லை என்றும் கூறியிருப்பது, மேலும் பல புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

2 சூட்கேஸ்களில் அறிக்கை! :

ஜெ.,க்கு அளித்த சிகிச்சைகள் குறித்த, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதைதொடர்ந்து, இரண்டு சூட்கேஸ்களில், சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷனில், நேற்று சமர்ப்பித்தது. இது தொடர்பாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த, 2016, செப்., 22ம் தேதி, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டதில் இருந்து, டிச., 5ம் தேதி வரையிலான, அனைத்து அசல் மற்றும் நகல் மருத்துவ ஆவணங்களை, 30 தொகுப்புகளாக தாக்கல் செய்துள்ளோம். மேலும், இது தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இழுத்தடிக்க சசி தரப்பு சதி:
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் புகார் கூறியுள்ளன.

ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், சசிகலா தரப்பு விளக்கத்தை கேட்டு, 2017 டிச., 21ல், பெங்களூரு சிறைக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் பட்டியலை தருமாறும், பட்டியல் கிடைத்த, 15 நாட்களில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், கமிஷனில், ஜன., 5ல், மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணைக்கு, கமிஷனில், ராஜா செந்துார்பாண்டியன் ஆஜரானார். அதன்பின், அவர் கூறியதாவது: விசாரணை கமிஷன், சசிகலாவிற்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. விசாரணைக்கு, நாங்கள் ஒத்துழைக்க தயார் என்றும், சசிகலா மீது புகார் கூறியவர்கள் குறித்த தகவல்களை அளிக்க கோரியும், மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில், நாங்கள் மனு அளித்த பின்னும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. எனவே, அனைவரிடமும் முழுமையாக விசாரணை முடிந்த பின், இயற்கை நீதி அடிப்படையில், அவர்களிடம், நாங்கள் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு, மற்றொரு புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளோம்.

அதனால், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் யார்; என்ன புகார் கூறினர் போன்ற தகவல்கள் கிடைத்த, 16வது நாள், கால அவகாசமின்றியும், தாமதமின்றியும், கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம். மேலும், இந்த மனு மீதான வாதம், ஜன., 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சட்டத்தின் மீதும், கமிஷன் மீதும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா தரப்பு, முதலில் மனு தாக்கல் செய்தபோதே, அனைத்து தகவல்களையும் தர, கமிஷன் தயராக இருந்தது. ஆனால், சசிகலா, தங்களிடம் உள்ள ஆவணங்கள் எதையும், இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆனால், மற்றவர்களிடம் விசாரணை முழுமையாக முடிந்த பின், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன.

22ல் அடுத்த விசாரணை:

பொங்கல் பண்டிகை முடிந்து, ஜன., 22ல், கமிஷனில் மீண்டும் விசாரணை துவங்குகிறது. அன்று, டாக்டர் சிவகுமாரிடம் விசாரணை நடைபெறுகிறது. வரும், 23ல், ஜெ., உதவியாளர் பூங்குன்றன்; 24ல், பெங்களூரு முத்துமாணிக்கம்; 25ல், டாக்டர் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடைபெறும்.

மூலக்கதை